மலேசியாவின் அடுத்த பிரதமராக இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பதவியேற்கவுள்ளதாக அரச மாளிகை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
சில நாள்களாக அந்நாட்டில் நீடித்த நிச்சயமற்ற அரசியல் நிலைக்குப் பிறகு, அந்த அறிவிப்பு வந்துள்ளது.
114 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்மாயில் சாப்ரியை பிரதமராக முன்மொழிந்ததாக அரச மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
புதிய அரசாங்கத்தை அமைக்க அந்தப் பெரும்பான்மை போதுமானது என அது குறிப்பிட்டது.
அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப, இஸ்மாயில் சாப்ரியை மலேசியாவின் 9வது பிரதமராக நியமிக்க மாமன்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிரதமரின் பதவியேற்புப் சடங்கு, நாளைப் பிற்பகல் இரண்டரை மணிக்கு நடைபெறும்.
முன்னாள் பிரதமர் முஹிதீன் யாசின், கடந்த திங்கட்கிழமை பதவி விலகியதைத் தொடர்ந்து, மலேசியாவில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டது.
அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட மாமன்னர், புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை, நாட்டின் இடைக்காலப் பிரதமராக முஹிதீனை நியமித்திருந்தார்.
இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் ஒரு அறிமுகம்
இவர் ஒரு வழக்கறிஞராக இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர்.
61 வயதான இஸ்மாயில் சாப்ரி, பஹாங் மாநிலத்தின் தெமெர்லோ வில் பிறந்தவர்.
1987ஆம் ஆண்டு தெமெர்லோ பிரிவு அம்னோ செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பேற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடக்கினார்.
2004ஆம் ஆண்டு தெமெர்லோ வட்டாரத்துக்கான அம்னோ தலைவர் ஆனார். பின்னர் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பஹாங் மாநிலத்தின் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வென்றார்.
2008ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2009ஆம் ஆண்டு திரு.நஜீப் ரசாக் தலைமையிலான அரசாங்கம் அமைந்ததும், அதில் உள்நாட்டு வணிக, கூட்டுறவு, பயனீட்டு அமைச்சர் ஆனார்.
2013ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி வரை அப்பொறுப்பில் இருந்த அவர், 2013 மே 16, விவசாயம்-விவசாயம் சார்ந்த தொழிலியல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புறநகர் மேம்பாட்டு அமைச்சர் பொறுப்பையும் ஏற்றார்.
கடந்தாண்டு மார்ச் 10ஆம் திகதியில் இருந்து இவ்வாண்டு ஓகஸ்ட் 16ஆம் திகதி வரை முஹிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தில், தற்காப்பு அமைச்சராகவும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சராகவும் இருந்தார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 7ஆம் திகதியிலிருந்து, கடந்த 16ஆம் திகதி வரை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு நாட்டின் 13வது துணைப் பிரதமராகவும் இருந்துள்ளார் இஸ்மாயில் சாப்ரி.
துணைப் பிரதமராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் தற்போது மலேசியாவின் 9வது பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
மலேசியாவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி, சர்ச்சைகளுக்கு இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பின் நியமனம் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது.
2018 பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்த அம்னோ, இதன் வழி 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
மலேசியாவில் கடந்த 3 ஆண்டுகளில் அமையும் மூன்றாவது அரசாங்கம் இது.



