இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (17) வவுனியாவில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த கூட்ட அறிக்கையையொட்டி விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, பச்சிலைப்பள்ளி தவிசாளர் சு.சுரேன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் கடந்த மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் குருகுலராஜா, நீங்கள் நடக்காத விடயங்களையெல்லாம் நடந்ததாக கூட்ட அறிக்கையில் குறிப்பிட்டு, சும்மா சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது, ஏற்கெனவேயும் அவர் இதேவிதமாக கருத்தை தெரிவித்திருந்தார்.
குருகுலராஜாவின் கருத்தால் கோபமடைந்த சுமந்திரன் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சி.சிறிதரன் “எங்களையெல்லாம் மடையன்கள் என நினைச்சுக் கொண்டிருக்கிறீயோடா?“ என ஆவேசமாக பேசினார்.
இதன்போது பதில் தலைவர் குறுக்கிட்டு, நிலவரத்தை கட்டுப்படுத்தினார்.
அரசியலமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரிகளிற்கு சிறிதரன் வாக்களித்தார் என சுமந்திரன் அணி சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்ட போது, ஒரு குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த குழுவில் சுமந்திரன் அங்கம் வகிக்கக்கூடாது, அப்படி அங்கம் வகித்தால் அந்த குழுவில் எனக்கு நம்பிக்கை இருக்காது என சிறிதரன் தெரிவித்தார். இதையடுத்து, அந்த குழுவில் தான் இடம்பெறவில்லையென சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை ஆராய பதில் தலைவர், நிர்வாக செயலாளர், பொருளாளர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.



