2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

Date:

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மார்ச் மாதத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, அந்த இலக்கு குறித்து துல்லியமான கணிப்பொன்றை மேற்கொள்வது கடினமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்படுவதற்கு முன்னர், 2026 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத மட்டத்தில் காணப்படும் என கணிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மை காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் நிலைமை எவ்வாறு மாறும் என்பதை திட்டவட்டமாகக் கூறுவது கடினமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தாக்கம் சுமார் மூன்று மாதங்களில் முடிவுக்கு வந்து, அதன் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பினால், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை விட சற்று குறையக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த நெருக்கடி 6 மாதங்கள் அல்லது 9 மாதங்கள் வரை நீடித்தால், அது பொருளாதார வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் துல்லியமான ஒரு சதவீதத்தை கணிப்பது கடினம் என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணிகளால், ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்குள் பொருளாதாரத்திற்கு ஏற்கனவே ஓரளவு தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

“இந்த ஆண்டும் பொருளாதார வளர்ச்சி சுமார் 5 சதவீதமாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச் மாதத்தின் பின்னர், குறிப்பாக ஏப்ரல் போன்ற மாதங்களில் உலகப் பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால், அதற்குப் பின்னரான அடுத்த மூன்று மாதங்களின் நிலைமை எவ்வாறு அமையும் என்று கணிப்பது கடினமாக உள்ளது.

எனவே, இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், தற்போதைய கணிப்பு 5 சதவீத அளவாகவே இருந்தது. இது வந்ததன் பின்னர் எதிர்வரும் காலத்தில் எவ்வாறு மாறும், எப்பொழுது ஸ்திரமடையும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. அதனால் ஒரு கணிப்பை மேற்கொள்வது கடினம்.

ஒன்றை மட்டும் கூற முடியும், இது மூன்று மாதங்களில் முடிவடைந்து, அடுத்த மூன்று மாதங்கள் சாதாரண நிலைக்குத் திரும்பினால், அந்த மூன்று மாத கால தாக்கம் மாத்திரமே ஏற்படும். அப்போது 5 சதவீதம் என்பது சற்று குறையக்கூடும்.

ஆனால், இந்த மூன்று மாத கால நிலைமை மேலும் 6 மாதங்கள் அல்லது 9 மாதங்களுக்கு நீடித்தால், அந்தத் தாக்கம் பொருளாதார வளர்ச்சியில் இன்னும் பெரியளவில் பாதிக்கலாம். அதை இப்போது கணிப்பது கடினம். ஏனெனில், அதன் பிறகு மேலும் என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கத்தைக் கொண்டு துல்லியமாகக் கணிப்பது கடினம். ஏனெனில் எண்ணெய் விலை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால் இரண்டாவது மூன்று மாதங்களுக்குள் (இரண்டாவது காலாண்டில்) ஏற்கனவே ஒருவித தாக்கம் ஏற்பட்டுள்ளது.” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்