கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (24). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
முருகன், சுமிகா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே அதற்கு சுமிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மாதம் 18ஆம் திகதி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கினர்.
சம்பவத்தன்று இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சுமிகாவை தாக்கி இழுத்து சென்று காரில் கடத்தி சென்றனர். அதை தடுத்த முருகனின் பெற்றோரை அவர்கள் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுமிகாவின் உறவினர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். சுமிகா, அவரது பெற்றோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர்.
திருவனந்தபுரத்தில் முருகேசனின் உறவினர் வீட்டில் சுமிகாவை பெற்றோர் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சுமிகாவை பாதுகாப்பாக மீட்டனர்.
மேலும் அவரது பெற்றோரான முருகேசன், பத்மா மற்றும் உறவினர் அனுசியா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரையும் ராதாபுரம் நீதிமன்றத்திலட போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் சுமிகா தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரை கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் கைதான முருகேசன், பத்மா, அனுசியா ஆகியோர் நெல்லையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.



