தமிழில் ‘உன்னைச் சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்ரி, ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர், கடந்த 2005-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்து கொண்டார். 2010-ல் விவாகரத்து செய்தார்.
பின்னர் நடிகர் ஜான் கொக்கெனை 2012-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் ஒளிப்பதிவாளர் விபின் என்பவரை 2024-ல் திருமணம் செய்தார். பின்னர் அவரையும் பிரிந்தார். இந்நிலையில் மீரா வாசுதேவன் கூறும்போது, “3 திருமணங்கள் தோல்வியடைந்த ஒரு பெண் என்று இந்தச் சமூகம் என்னை முத்திரை குத்தும்போது, அதை என்னால் கடந்து வர முடிந்ததற்குக் காரணம், மற்றவர்களை பற்றி நான் கவலைப்படாததுதான். இந்தத் தெளிவுதான், எனக்குள் ஏற்பட்ட பெரிய மாற்றம்.
ஒரு துணை, நம்மை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியக்கூடிய ஒரு பொருளாகப் பார்க்கும்போதோ, அல்லது குடும்பத்துக்கும் மகனுக்கும் அச்சுறுத்தலாக மாறும் போதோ, அந்தப் பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பது தற்கொலைக்குச் சமமானது.நான் எனது மகனிடம் அடிக்கடி சொல்வதுண்டு, ‘என் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை 3 முட்டாள்தனமான திருமணங்களுக்காக வீணடித்துவிட்டேன்’ என்று.
அந்த நேரத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருந்தால், எனக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க முடியும். என் அப்பா, அம்மா, சகோதரியுடன் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக, என்னை மதிக்காத, தீவிரமாக எடுத்துக் கொள்ளாத நபர்களுக்காக அந்தப் பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.



