பிரபல பாலிவுட் நடிகையான மவுனி ராய், ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ‘நாகினி’ தொடரில் நாகினியாக நடித்துப் புகழ்பெற்ற இவர், துபாய் தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மவுனி ராய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுராஜ் நம்பியார் புகைப்படங்களை நீக்கினார்.
இதனால் இருவரும் பிரிவதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தாங்கள் பிரிவதை மவுனி ராயும் சுராஜ் நம்பியாரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த விஷயங்களைத் தனிப்பட்ட முறையிலும் சுமுகமாகவும் கையாள்வதற்குக் கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எங்களைப் பற்றிய கற்பனையான கதைகள் மற்றும் அப்பட்டமான பொய்களைப் பரப்புவதன் மூலம் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பரபரப்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழமான சிந்தனைக்குப் பிறகே பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் தனித்தனி பாதைகளில் முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளோம். வரும் காலங்களிலும் எங்களது நட்பைப் போற்றுவதற்கு முயற்சிப்போம். உங்களது புரிதலுக்கும், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்துக்கு நீங்கள் அளிக்கும் மரியாதைக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.



