கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கொல்லப்பட்டவர் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவார்.
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றத்தில் சுமார் 20 சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த 2 சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்று, ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்தி எஹலியகொட கரதன பிரதேச காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று கை, கால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொலை நடந்த மறுநாள், கரந்தன பகுதியில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழு ஒன்று, பாறைகளின் குவியலிலிருந்து ஒரு மனிதக் கை வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டது. அதனைத் தொடர்ந்த சோதனைகள், அது காணாமல் போன சீன நாட்டவரின் உடல் என்பதை உறுதிப்படுத்தின. அதே நேரத்தில் செயல்பட்ட காவல்துறை, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, விசாரணையை விரிவுபடுத்தியது.
இந்தத் திட்டமிட்ட கொலையில் ஈடுபட்ட இருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எஞ்சிய சந்தேக நபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அவர்களுக்குப் பயணத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவும் எஹெலியகொட காவல்துறையும் இணைந்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன. மேலும், இச்சம்பவம் உடனடியாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அப்பாவி சீன நாட்டவர்களுக்கு எந்த அநீதியோ துன்புறுத்தலோ இழைக்கப்படக்கூடாது என்றும் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.




