நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், உடல்கள் கிடைக்காததால் பல உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை அவர்களை காணாமல் போனவர்கள் என்றே நேபாள அரசு கூறி வருகிறது.
உயிரிழப்புகள் தொடர்பாக நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247. காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 591.
நேபாள நீர்மின் திட்டங்களில் 933 பேர் சிக்கியிருக்க வாய்ப்பு:
நேபாளத்தின் 6 நீர்மின் திட்டங்களில் 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் பலேந்திர ஷா தகவல்:
நேபாளம் கற்பனை செய்ய முடியாத பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்துள்ளார். “போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், இழந்த உயிர்களையும் சொத்துக்களையும் உள்கட்டமைப்புகளையும் முழுமையாக கணக்கிடுவதை மிகவும் கடினமாக்கியுள்ளது.
மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு, தொடர்ச்சியான அபாயங்கள் காரணமாக இந்த பணி சவாலாக இருந்தாலும் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் உறதியுடன் முன்னேறி வருகிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.




