2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (செப்டம்பர் 1) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது உரிமங்களை 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் கட்டாயமாகப் புதுப்பிக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது பதிவுகளை செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2026க்குள் புதுப்பிக்க வேண்டும். காலதாமதமாக புதுப்பிக்கும் நிறுவனங்களுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களும் உரிய காலத்திற்குள் புதுப்பிப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்து, தேவையற்ற சிரமங்கள் மற்றும் சட்ட ரீதியான விளைவுகளைத் தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.




