உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதை அடுத்து, ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புனுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடத்தப்பட்ட போர் எதிர்ப்புப் போராட்டங்களில் கிட்டத்தட்ட 1,400 பேரை ரஷ்யாவில் பொலிசார் கைது செய்தனர் என்று ஒரு சுயாதீன கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
“51 நகரங்களில் ஏற்கனவே 1,391 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று OVD-Info வியாழக்கிழமை கூறியது. இது எதிர்க்கட்சி பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கிறது.
மொஸ்கோவில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது பெரிய நகரமான சென்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுமார் 340 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்யாவில் கணிசமான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெகுஜன போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
புடினை எதிர்த்தவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
புட்டினுக்கு எதிராக ரஷ்யாவின் மிகப்பெரிய போராட்டங்களைத் திரட்டி, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மொஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் கொலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
வியாழன் அதிகாலை உக்ரைன் மீது புடின் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, பல ரஷ்ய ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் மக்கள் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
ஒரு முக்கிய மனித உரிமை வழக்கறிஞரான லெவ் பொனோமவியோவ் அவர்களால் தொடங்கப்பட்ட கையெழுத்து போராட்டத்தில், சில மணிநேரங்களுக்குள் 150,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துகளையும், நாள் முடிவில் 289,000 கையொப்பங்களையும் பெற்றது.
250க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் ஆக்கிரமிப்பை கண்டித்து திறந்த கடிதத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். மற்றொன்றில் சுமார் 250 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டனர், மொஸ்கோ மற்றும் பிற நகரங்களில் உள்ள 194 நகரசபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர்.
மொஸ்கோவில், புஷ்கின் சதுக்கத்தில் குழுமிய போராட்டக்காரர்கள் ,”போர் வேண்டாம்!” என கோசமெழுப்பினர்.
முன்னதாக வியாழன் அன்று, ரஷ்ய அதிகாரிகள் போர்-எதிர்ப்பு அனுதாபிகளை போராட்டங்களுக்கு ஒன்றுகூடுவதற்கு எதிராக எச்சரித்தனர்.
பெரிய குற்றங்களை விசாரிக்கும் அரசாங்க அமைப்பான புலனாய்வுக் குழு, ரஷ்யர்கள் “பதற்றமான வெளிநாட்டு அரசியல் சூழ்நிலை” தொடர்பான அனுமதியற்ற போராட்டங்களில் கலந்துகொள்வதால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.
“குற்றவியல் பொறுப்பு வரை வழக்குத் தொடரும் வடிவத்தில் இந்த நடவடிக்கைகளின் எதிர்மறையான சட்ட விளைவுகளைப் பற்றி ஒருவர் அறிந்திருக்க வேண்டும்” என்று குழு கூறியது.
அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் சிலர் உட்பட பல ரஷ்ய பிரபலங்கள் மற்றும் பொது நபர்கள் தாக்குதலுக்கு எதிராகப் பேசினர். அரசு நிதியுதவியுடன் இயங்கும் மொஸ்கோ திரையரங்கின் இயக்குநரான யெலினா கோவல்ஸ்கயா, தனது வேலையை விட்டு விலகுவதாக பேஸ்புக்கில் அறிவித்தார், “கொலையாளிக்காக வேலை செய்து அவரால் சம்பளம் பெறுவது சாத்தியமில்லை” என்று கூறினார்.
“நட்பு நாடான உக்ரைன் மீதான விளாடிமிர் புட்டின் தாக்குதலால் உங்களில் பலர் இப்போது விரக்தியையும், உதவியற்ற தன்மையையும், அவமானத்தையும் உணர்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் விரக்தியடைய வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன், ”என்று மனித உரிமை ஆர்வலர் மெரினா லிட்வினோவிச் பேஸ்புக்கில் ஒரு வீடியோ அறிக்கையில் கூறினார், வெகுஜன போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“ரஷ்ய மக்களாகிய நாங்கள், புடின் கட்டவிழ்த்துவிட்ட போருக்கு எதிரானவர்கள். இந்த போரை நாங்கள் ஆதரிக்கவில்லை, இது எங்கள் சார்பாக நடத்தப்படவில்லை, ”என்று லிட்வினோவிச் கூறினார்.



