முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியுள்ளது.
3 ரி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி சார்பில் முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 44 ஓட்டங்களும் (32 பந்துகள்) இஷான் கிஷன் 89 ஓட்டங்களும் (56 பந்துகள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 200 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை விளையாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷங்க சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷாரா 13 ஓட்டங்களில் வெளியேறினார். பெரிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியின் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத்தவறினர். அசலங்கவை (53*) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



