மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு சென்றிருந்தார். காரில் சென்று கொண்டிருந்த போது வழியில் இருந்த ஒரு கடையைப் பார்த்து பிரதமர் அங்கு சென்றார்.
அந்தக் கடைக்குச் சென்ற பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தின் பிரபல சிற்றுண்டியான ஜால்முரியை (காரப்பொரி) வாங்கி விரும்பிச் சாப்பிட்டார். அவரது யதார்த்தமான செயல் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து ஜால்முரி சாப்பிடும் தனது புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். சாப்பிட்ட பின்னர் அந்தக் கடைக்காரருக்கு ரூ.10 கொடுத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அந்தக் கடைக்காரருக்கு வழங்கிய 10 ரூபாயை வாங்க பலர் முயற்சி செய்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அதாவது அரிய புகைப்படங்கள், வித்தியாசமான ரூபாய் நோட்டுகள், பிரபலங்கள் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை சேகரித்து வைத்திருக்கும் சிலர் இந்த 10 ரூபாயைப் பெற முயற்சி செய்வதாக தெரிய வந்தது. மேலும் பிரதமர் மோடி வழங்கிய நோட்டுக்காக ரூ.1.11 லட்சம் தருவதாகவும் சமூக வலைதளவாசிகள் அதில் கூறியிருந்தனர்.
இந்நிலையில், அந்தக் கடையில் பிரதமர் மோடிக்கு ஜால்முரியைத் தந்த கடைக்காரர் உண்மையில் கடைக்காரர் அல்ல என்றும் கடைக்காரர் போல வேடமிட்டிருந்த பிரதமரின் எஸ்பிஜி (சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு) அதிகாரி என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுத்துவிட்டது. அந்தக் கடைக்காரர் பெயர் விக்ரம் ஷா என்கிற தீபக்குமார் என்றும் அவர் பிஹாரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இந்நிலையில் யார் அந்த 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.1.11 லட்சம் தர முன்வந்தது என்றும், கடைக்காரர் போல வேடமிட்ட எஸ்பிஜி உயர் அதிகாரி போன்ற செய்திகளை வெளியிட்டது யார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.



