அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி அவரை கத்தியால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கள்ளியந்தீவைச் சேர்ந்த மது போதைக்கு அடிமையாகிய 30 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 8ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.00 மணியளவில் மதிய உணவுக்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சக்தி பாடசாலைக்கு அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த அந்த குறித்த நபர் வீதியில் பிரயாணித்துக் கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மாட்டு சாணம் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவத்தை அவரது மேலதிகாரிக்கு அறிவித்துவிட்டு, அந்த இளைஞனை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பின் தொடர்ந்து கொண்டிருந்த போது குறித்த நபர் மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் கத்தியை சுழற்றி அவரை அச்சுறுத்திக் கொண்டிருந்துள்ளதையடுத்து அவரிடம் இருந்து கத்தியை பறிக்க முற்பட்டபோது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்துள்ளதுடன் அவரின் பொலிஸ் சீருடையை கிழித்து கொண்டபோதும் ஒருவாறு அவனை மடக்கிடிபித்து கைது செய்து கொண்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்தவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை கைது செய்யப்பட்டவர் மது போதைக்கு அடிமையாகியவர். அவரை புனர்வாழ்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது கோபம் கொண்ட அவன் அண்மையில் அவர் வீதியால் செல்லும் போது வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்து அவர் மீது செருப்பை வீசி எறிந்ததுடன் அவர் வீதியால் பிரயாணிக்கும் போதும் அவரது வீட்டின் மீதும் தொடர்ந்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-கனகராஜா சரவணன்-



