யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதேவேளை, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணொருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
பெரிய விளான் பகுதியிலுள்ள காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நேற்று (25) அர்ச்சுனா அந்த காணியை துப்புரவு செய்தார். இதன்போது துப்புரவுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மோதி எல்லை தூண் சேதமடைந்துள்ளது.
அந்த சமயம், அந்த காணியின் ஒரு பகுதியை உரிமை கோரி வரும் இரு பெண்கள் அங்கு வந்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்க்கத்தின் போது, அர்ச்சுனா தனது கைத்துப்பாக்கியை எடுத்து பெண்களை மிரட்டியுள்ளார். பெண்களில் ஒருவர் அர்ச்சுனா மீது கல்லெறிந்து தாக்கியுள்ளார். இதில் அர்ச்சுனாவின் ஒரு கையில் சிறிய காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை பெண்கள் தரப்பினர் காணொளி பதிவு செய்தனர். அர்ச்சுனாவுடன் கூடி வாழும் கௌசல்யா என்ற பெண்ணும் காணொளி பதிவு செய்தார்.
சம்பவம் தொடர்பாக அர்ச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை, சாதாரண முரண்பாடுகளிற்கே கைத்துப்பாக்கியை எடுக்கும் அர்ச்சுனாவிடம் கைத்துப்பாக்கி இருப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.



