ஒரு அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு கடன் தவணைகளை வழங்கும் போது, திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பயணத் தடையின் கீழ் இருந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஐந்து அதிகாரிகளில் ஒருவர் நேற்று (30) மர்மமான முறையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய அபேசிங்க முதியன்செலகே ரங்க நிஷாந்த ராஜபக்ஷ ஆவார்.
குளியாபிட்டிய, மதகும்புரமுல்ல பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில், ரத்தக் காயங்களுடன் அவரது உடல் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக வடமேற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும், அவரது இரு கால்களிலும் இடது கையிலும் உள்ள நரம்புகள் வெட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அதிகப்படியான ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்ததாக பொலிஸ் கூறுகிறது. அவர் இறந்த இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
50 வயதான ரங்க ராஜபக்ச, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். அவரது மனைவி ஓர் ஆசிரியை. காலையில் அவரது மனைவி வேலைக்குச் சென்ற பிறகு, ரங்க ராஜபக்ச தோட்டத்திற்குச் செல்வதாகத் தன் மகளிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை தேடியபோது, அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இந்த மரணம் தற்கொலையா? விபத்தா? கொலையா? நேற்று மாலை வரை அது உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் கண்காணிப்பாளர் மினுரா செனரத் தெரிவித்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர் தனக்குத்தானே இந்தக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டது தெளிவாகியுள்ளது. அதன்படி, இந்த மரணம் தற்கொலையாகத் தெரிகிறது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே மரணத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவரும் என்றும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று பிரேதப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பண மோசடி தொடர்பான விசாரணையில் அவர் ஒரு முக்கிய காரணியாக உள்ளார் என குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. பணமோசடிக்கு வழிவகுத்த மின்னஞ்சலை ரங்க ராஜபக்ச பெற்றதாகவும், அதைத் தொடர்ந்த செயல்முறைக்கு அவரே முக்கிய பொறுப்பாளர் என அடையாளம் காணப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை கூறியது. தவறான மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கும்போது ஏற்பட்ட அவரது கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என சிரேஷ்ட குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மோசடி குறித்து அவருக்குத் தெரிந்திருந்ததா என்பதை உறுதி செய்வதற்காக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். இடைநீக்கத்திற்கு முன்பு ஒரு முறையும், இடைநீக்கத்திற்குப் பிறகு இரண்டு முறையும் அவர் சிஐடி புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அடுத்த வாரத் தொடக்கத்தில் அவரை மீண்டும் அழைக்க சிஐடி தயாராகி வருகிறது.
அவரது மரணம் மேலதிக விசாரணைகளுக்கு ஒரு பெரும் தடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், பல விவரங்கள் மறைக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் நிகழ்த்தப்பட்டது என ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறினார். இருப்பினும், தொழில்நுட்ப உண்மைகள் உள்ளிட்ட தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.



