தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.
இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 7 வருடத்துக்கு முன் அந்த இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் இந்தத் துன்புறுத்தல் நடந்தது. என்னை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.
அந்த அறையில் சத்தம் போட்டால் வெளியில் கேட்காது. அது மறைக்கப்பட்ட இடம். அங்கு நடந்த அனைத்தும் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அது பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று என்னை பிளாக்மெயில் செய்தார்.
என்னைப் போன்று பல பெண்களுக்கு அதே அறையில் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஃபைல்ஸை விட மோசமானவர் அந்த இசையமைப்பாளர். சின்னக் குழந்தைகள் பாட வருவார்கள், அவர்களை சிசிடிவி கேமராவில் பார்த்துக் கொண்டு இருப்பார். அதை பொழுது போக்காகவே மாற்றிவிட்டார். நான் ஆதாரத்துடன் அந்த இசையமைப்பாளர் யார் என்று விரைவில் அறிவிப்பேன்.
முறைப்படி சொல்வேன், எந்தப் பொண்ணுக்கும் எனக்கு நடந்த மாதிரி நடக்கக் கூடாது. இன்னும் அந்த இசையமைப்பாளர் தொடர்ந்து அதை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அவர் மனைவியும் உடந்தை. அவரிடம் இருந்து பல பெண்கள் தப்பிக்க முடியாமலும் சிலர் தப்பித்தும் வந்திருக்கிறார்கள்.
எனக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதோ, அதே வகையில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஸ்வாகதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவருடைய புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



