மொரட்டுவ, மோதர, எகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளளார்.
‘அப்பா’ என அழைக்கப்படும் துலான் சமீர சம்பத் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவரும் சிறு காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் மறைந்திருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பாணந்துறை சாலிதுவின் முக்கிய அடியாளே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எகொட உயன, தேசிய வீடமைப்புப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு 11 மணியளவில் வீடொன்றின் அறை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் அப்பாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரும், சிறு காயமடைந்த விசேட அதிரடிப்படை சிப்பாயும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிறிது நேரத்தில் அப்பா இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடந்த அறையிலும் அதிக அளவில் ரத்தம் கசிந்தது.
கல்கிசை குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்..



