சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், தற்போது உள்நாட்டு எரிபொருள் விலையை குறைக்க முடியாத நிலை இருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (17) நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் பல மாதங்களுக்கு முன்பு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட இருப்புகளிலிருந்தே விநியோகிக்கப்படுவதாக கூறினார்.
“அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகள் இருக்கும் வரை உள்நாட்டு விலையை குறைக்க முடியாது,” என அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய இருப்புகள் முடிவடைந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய எரிபொருள் நாட்டை வந்தடைந்த பின், எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் வந்த எரிபொருள் கப்பல்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் பழைய அதிக விலை கொள்வனவுகளின் இருப்புகளை பயன்படுத்தி முடிக்க வேண்டியிருப்பதாக விளக்கமளித்தார்.
“குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளின் பயன் நுகர்வோருக்கு கிடைக்க இன்னும் சில காலம் ஆகும். எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். அப்போது தற்போதைய நிவாரணத்தை தொடர்வதா அல்லது விலையை மேலும் குறைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.




