அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கம்பஹா, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் ஆவார்.
பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, நேற்று (08) இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரால் முறைப்பாட்டாளரிடமிருந்து மோசடி செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை 426,300 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில், மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகையில் 186,500 ரூபாய் சந்தேக நபரின் தனிப்பட்ட வங்கித் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




