யாழ்ப்பாணம், இணுவிலில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணுவில், துரை வீதிக்கு அண்மையான பகுதியில் உள்ள ஆவா குழு ரௌடியான நிசா விக்டர் என்பவனது வீட்டில், அறைக்குள் இந்த தொழிற்சாலை இயங்கியது.
திரவவடிவில் நாட்டுக்கு எடுத்து வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அந்த தொழிற்சாலையில் வடிகட்டப்பட்ட, ஐஸ் போதைப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.
குறித்த நிலையம் இரசாயாண ஆய்வு கூடத்தை போன்று வடிவமைக்கப்பட்டு இரசாயனங்களை பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்றதாக யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், யாழ் பல்கலைக்கழக துறைசார் நிபுணர் நேரில் சென்று பார்வையிட்டு இன்று உறுதிப்படுத்தினர்.
பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் ஆய்வுகூடத்தில் பிரதான குற்றவாளிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களின் முன்னர் ஹோமாகம பகுதியில் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையொன்று கைப்பற்றப்பட்டதாகவும், இலங்கையில் ஐஸ் தொழிற்சாலை சிக்கிய இரண்டாவது சம்பவம் இதுவென்று பொலிசார் தெரிவித்தனர்.




