கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரேவி சுதா’ என்பவரே இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அங்கொட பிரியந்த மற்றும் பிரான்ஸ் ரூபன் ஆகியோரும் இதனுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தற்போது சந்தேகிக்கப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் மொராக்கோவிற்கு மீள்ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள தனிப்பட்ட உளவாளி ஒருவரிடமிருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்குவிற்கு தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய கொள்கலனை பரிசோதிப்பதற்காக கடந்த 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டதுடன், அதற்கமைய நேற்று (31) அந்த கொள்கலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் சுங்க அதிகாரிகளின் உதவியும் கிடைத்தது.
கொள்கலனுக்குள் இருந்த பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுமார் 472 கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகை உள்நாட்டு வர்த்தகர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதன்படி, தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சஷிதரன் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானிலிருந்து கொள்கலனை இறக்குமதி செய்த தெமட்டகொடவைச் சேர்ந்த தொழிலதிபர், அது கொழும்புத் துறைமுகத்தில் இருந்தபோதே, அதை ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிற்கு மீண்டும் அனுப்புவதற்கான ஆவணங்களைத் தயாரித்திருந்தார் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்தார்.
இந்த தொழிலதிபர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யும் ஒரு தொழிலதிபர் ஆவார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மற்றொரு தொழிலதிபர் மற்றும் ஜம்பட்டா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடனான விசாரணைகளின் போது பல முக்கிய தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் காவல்துறை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் தகவல்களின்படி, இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பல சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




