மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள் நீரில் மூழ்கி வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே; விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.




