மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்; வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை பிடித்து வான் ஒன்றில் கடத்திச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் வாகனத்தை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஒரமாக மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கமரா மூலம் ஆடை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும் மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு. மாடுகளை திருடி கடத்தி சென்று வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.




