மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடிந்து வீழ்ந்துள்ள மகிழவெட்டுவான், பழுகாமம், மாவடி ஓடை போன்ற 3 பாலங்களை நிர்மானித்து தருமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கைக்கு அமைவாக 45 பேர் கொண்ட இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் இலங்கை இராணவ தொழில்நுட்ப பிரிவினர்கள் மற்றும் இலங்கை வீதி அதிகார சபையுடன் இணைந்து பழுகாமம் பெரிய போரதீவு இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தை முதற்கட்டமாக புனர் நிர்மானிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து ஏனைய பாலங்களுக்கான பொருட்கள் வந்தவுடன் தொடர்ந்து இந்திய இராணுவத்தினர் புனர்நிர்மான பணிகளை முன்னெடுப்பார்கள் என மாவட்ட வீதி அதிகார சபை பணிப்பாளர் எந்திரி வேதநாயகம் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.




