இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வரும் ஒரு பெண்ணை அடையாளம் காண உதவுமாறு இலங்கையின் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒரு பொது அறிவிப்பில், அப்பெண் ‘ரஹ்மா’ என்று அறியப்படுவதாகவும், ஆனால் அவரது அடையாளம் மற்றும் குடும்ப விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பெண் குறித்து தகவல் தெரிந்த எவரும், பத்தரமுல்ல, சுஹுருபாய, 16-ஆம் மாடியில் உள்ள தூதரக விவகாரங்கள் பிரிவின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் +94 11 227 5525 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தகவல்களை வழங்கலாம்.
விசாரணை தொடர்பாகப் பெறப்படும் அனைத்துத் தகவல்களும் மிகுந்த இரகசியத்தன்மையுடன் கையாளப்படும் என்று அமைச்சு உறுதியளித்துள்ளது.
விசாரணையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்த விவரங்களை அந்த அறிவிப்பு வழங்கவில்லை என்றாலும், தெற்கு லெபனானில் தெருநாய்கள் மற்றும் பூனைகளைப் பராமரிப்பதற்காக அப்பகுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஒரு பெண், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா நேற்று செய்தி வெளியிட்டது.




