தமது நிரந்தர வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதால் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள சுகாதார தொண்டர்களுக்கு அவர்களது சேவையின் அனுபவத்தை தகுதியாக கருத்தில் எடுத்து நாம் கடந்த காலத்தில் மேற்கொண்டது போன்று தற்போதும் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுப்பதே சிறந்ததாக அமையும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
நிரந்தர நியமனத்திற்கான நேர்முக தேர்வில் ஏற்பட்ட குழப்பங்களால் தமது நிரந்தர வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதை கருத்திற்கொண்டு அதன் வலிகளை சுமந்தவர்களாக சுகாதார தொண்டர்கள் தாற்போது வீதிக்கிறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக நீண்டகாலமாக துறைசார் சேவையில் இருப்பவர்களை புறக்கணித்து, சம்பந்தமில்லாதவர்களும் அனுபவ தகுதி இல்லாதவர்களையும் கொண்டு குறித்த வேலைவாய்பு வெற்றிடங்களை நிரப்புவதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதை அறிந்த குறித்த சுகாதார தொண்டர்கள் குறிப்பாக நீண்டகாலமாக தொடர்ச்சியாக தொண்டர்களாக சேவையாற்றி வந்தவர்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.
இதேநேரம்; கடந்த காலங்களில் நான் ஆட்சியில் இருந்தபோது சுகாதார தொண்டர்கள் மட்டுமல்லாது தொண்டர் ஆசிரியர்கள், விளையாட்டுத்துறை டிப்ளோமா ஆசிரியர்கள், கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் என ஏராளமானவர்களது தேவைகள் அரசுகளுடன் எனக்கிருந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் இணக்க அரசியலுக்கு ஊடாக பொருத்தமான வாய்ப்புக்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தோம்.
அதுபோல நூற்றுக்கணக்கான சுகாதார தொண்டர்களுக்கும் அவர்களது அனுபவத்தை தகுதியாக கருத்தில் எடுத்து விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றுக்கு ஊடாக அப்போது நிரந்தர நியமனங்களை நாம் பெற்றுக்கொடுத்திருந்தோம்.
இதேநேரம் நான் இறுதியாக அமைச்சரவையில் இருந்தபோதும் கூட இந்த சுகாதார தொண்டர் பிரச்சினை தொடர்பாக அன்றைய அமைச்சரவையில் பிரஸ்தாபித்து ஒரு விசேட ஏற்பாபாடாக வடக்கில் நூறுபேருக்கு நியமனம் வழங்கவதற்காக கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அந்த சமயம் அன்றிருந்த சுகாதார அமைச்சர் தமக்கும் கொழும்பில் ஒரு நூறுபேருக்கு இவ்வாறான நியமனம் வேண்டும் என கோரியிருந்த நிலையில் இரு பகுதிக்கும் நியமனங்களை வழங்குவதற்கான அமைச்சரவையின் அங்கிகாரத்தையும் பெற்றிருந்தோம். ஆனாலும் துரதிஸ்டவசமாக அந்த வாய்ப்பு ஆட்சி மாற்றம் காரணமாக கைநழுவிப் போய்விட்டது.
இதேநேரம்; தற்போது ஆட்சியை முன்னெடுக்கும் கட்சியை சேர்ந்த குறிப்பாக வடக்கைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருக்கின்றார்கள். இதனால்; இதை அவர்கள் மிக இலகுவாகச் செய்ய முடியும்.
அதேநேரம் எந்த அரசும் எமது மக்களுக்கு தானாக முன்வந்து தாம்பாளத் தட்டில்வைத்து எதனையும் தரப்போவதில்லை. ஆனபடியால் இன்றைய ஆட்சியாளர்களுடன் இருக்கும் அவர்களது கட்சியை சேர்ந்த எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்கள் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி அழுத்தங்களை கொடுத்து இந்த சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான எனது ஆலோசனையாக இருக்கும் என் எண்ணுகின்றேன் என்றார்.




