யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் சட்டவிரோத இறைச்சியை பயன்படுத்தி கொத்து தயாரித்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று மாட்டுக் கொத்து உண்ணச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர், இறைச்சி வித்தியாசமாக இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று உணவகத்தை ஆய்வு செய்தனர்.
உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கியது. இறைச்சியை எங்கு வாங்கினோம் என்பதை உரிமையாளரால் தெளிவாக உறுதி செய்ய முடியவில்லை. சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சியாக இருக்கலாமென கருதப்பட்டது.
இதையடுத்து, உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உணவகத்துக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், ரூ.65,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
உணவகங்களில் இறைச்சி வாங்கும் போது, வாங்கிய இறைச்சியை உறுதி செய்யும் பற்றுச்சீட்டுக்களை வைத்திருப்பதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாமென சுகாதரத்துறையினர் சுட்டிக்காட்டினர்.




