வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (19) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட மற்றும் கோயில் நிர்வாகத்தினர் 8 பேரை நெடுங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தொல்லியல் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் பிணையில் வெளிவரக்கூடாது என்பதற்காக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
கைதானவர்களின் வழக்கு விசாரணை நாளை (19) வவுனியா நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.
நாளை அவர்கள் மீதான குற்றப்பத்திரத்தில் திருத்தம் செய்து, அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர். ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு க.வி.விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.
என்றாலும், தமிழ் எம்.பிக்களை சந்திக்க ரணில் உடனடியாக நேரம் ஒதுக்கவில்லை. புதன்கிழமை பகல் 11 மணிக்கே சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நகர்வு தமிழ் எம்.பிக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பின்னணியில் நாளை காலை நாடாளுமன்றத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இதில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கெள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




