நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சுப மங்கள மண்டபத்தில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், மளிகை மற்றும் சில்லறை வணிகர்கள், மருந்தக உரிமையாளர்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்களை இலக்காகக் கொண்டு இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தினால் இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர் இசட்.எம். ஸாஜீத் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு வர்த்தகர்களுக்குச் சட்ட விதிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.
இதன்போது, நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம், பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தல், ரசீது (பற்றுச்சீட்டு) வழங்குதல், காலாவதி திகதி மற்றும் லேபிள்களைச் சரிபார்த்தல், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்த்தல், உணவுப் பொருட்களை முறையாகச் சேமித்தல் மற்றும் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை வர்த்தகர்கள் முறையாகக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் ஜீவராஜ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.பி.எம். றிப்சாத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்




