சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் – 2026 ஆகியவற்றை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை நிர்வாகப் பகுதிகளில் விசேட கரையோர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.
தூய்மையான இலங்கை செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, கடல் மற்றும் கடற்கரைச் சூழலைப் பாதுகாத்தல், கடற்கரை மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையில் நடைபெற்ற இத்தூய்மைப்படுத்தல் நடவடிக்கையில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல், பிரதேச சபை செயலாளர், சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு வகையான கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன், அவை பொலித்தீன், பிளாஸ்டிக், உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகள் என முறையாகத் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை தூய்மையாகப் பேணுவதுடன், எதிர்காலத்தில் கழிவுகளை முறையாக அகற்றும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.




