கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவுப் பகுதியின் இருபுறமும் உள்ள அதிக ஆபத்துள்ள வலயத்திலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி அதன் முன்னேற்றத்தை வியாழக்கிழமை (19) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி சில்வா, புதன்கிழமை (18) உத்தரவிட்டார்.
வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேற மறுத்த பதினாறு குடும்பங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
கொஸ்லந்த பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்களை பரிசீலித்த பதில் நீதவான் கென்னத் டி சில்வா, பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் 16 குடும்பங்களை உடனடியாக அகற்றி, நாளை நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அவ்வாறு செல்லாவிட்டால் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.