இஸ்ரேல் எல்லையில் இருந்து காஸாவுக்குள் மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்காது, ஆனால் எகிப்தில் இருந்து வரும் உதவிகளை தடுக்காது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் போர் அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.
இன்று போர் அமைச்சரவை 3 முடிவுகளை அறிவித்தது.
1. பாலஸ்தீனிய போராளிக் குழுக்களால் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் திரும்பும் வரை, இஸ்ரேல் தனது பிரதேசத்தில் இருந்து காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்காது.
2. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பணயக் கைதிகளைப் பார்க்க வேண்டும் என்று இஸ்ரேல் கோருகிறது. இந்தக் கோரிக்கைக்கு சர்வதேச ஆதரவைத் திரட்ட வேலை செய்யும்.
3. தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பொருட்கள் மாத்திரம் எகிப்தில் இருந்து காசாவை அடைவதை இஸ்ரேல் தடுக்காது. ஹமாஸை அடையும் அனைத்து பொருட்களும் இஸ்ரேலால் தடுக்கப்படும்.
“ஜனாதிபதி (ஜோசப்) பைடனின் கோரிக்கையின் பேரில், தெற்கு காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து மட்டுமே இருக்கும் வரை, எகிப்திலிருந்து மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் தடுக்காது” என்று நெதன்யாகு அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட பைடன், “பெரும்பான்மையான பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் அல்ல” என்று தனது வழக்கமான பல்லவியை திரும்பத் திரும்ப பாடினார்.
ஹமாஸ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.
“காசாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று நடந்த மாபெரும் உயிர் இழப்பால் நான் கோபமும் வருத்தமும் அடைந்தேன். இன்று நாம் பார்த்த தகவல்களின் அடிப்படையில், இது காசாவில் ஒரு பயங்கரவாத குழுவால் ஏவப்பட்ட தவறான ரொக்கெட்டின் விளைவாக தோன்றுகிறது.”
காசா மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் தண்ணீர் தேவை என்றார்.
இஸ்ரேலின் போர் அமைச்சரவையிடம் உதவி பொதுமக்களை சென்றடைய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்தே, மனிதாபிமான உதவிகள் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்ல ஆரம்பிக்க முடியும் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
ஹமாஸ் உதவியை திசை திருப்பினால் அல்லது திருடினால், ஹமாஸ் காசா மக்கள் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை என்று அவர் கூறுகிறார்.
காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 100 மில்லியன் டொலர் புதிய உதவியை பைடன் அறிவித்தார்.
“நீங்கள் ஒரு யூத நாடு, நீங்களும் ஒரு ஜனநாயக நாடு. “இஸ்ரேல் பயங்கரவாதிகளின் சட்டத்தின்படி வாழவில்லை“ என்றார்.
“உங்களை நீங்களாக ஆக்குவதை விட்டுவிட முடியாது. நீங்கள் அதை விட்டுவிட்டால், நீங்கள் பயங்கரவாதிகளை வெற்றிபெற அனுமதித்தீர்கள், ”என்கிறார் பைடன்.
இரண்டு தேச தீர்விற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஆபிரகாம் உடன்படிக்கையை விரிவுபடுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இந்தத் தாக்குதல்கள் தன்னை மேலும் உறுதியாக்கியதாக பைடன் கூறுகிறார்.




