நுவரெலியா பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு சொந்தமான வாகனத்தில் ஏறி கடல் பார்ப்பதற்காக கொழும்புக்கு சென்ற நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தின் கீழ் பராமரிக்கப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் வாரம்தோறும் அவர்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் முன் வைக்குமாறு நுவரெலிய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னர் அந்த சிறுவர்களை மீண்டும் அவர்களது பழைய சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேசத்திலுள்ள தனியார் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி காலையில் 4 சிறுவர்கள் தப்பி சென்றனர். சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு சொந்தமான வாகனத்தை எடுத்துக் கொண்டு கொழும்புக்கு பயணித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தினர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து, நுவரெலியா பொலிஸார் நாடுபூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
4 சிறுவர்களும் பயணித்த வாகனம் நிட்டம்புவ பிரதேசத்தில் ஒன்று ஏற்படுத்தி தப்பிச் சென்ற போது, விபத்திற்குள்ளான வாகன சாரதி, சிறார்களின் வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார்.
நிட்டம்புவ பொலிசாரால் சிறுவர்களை கைது செய்து, வாகனத்தை கைப்பற்றினர்.
சிறுவர்களிடம் முன்னெடுத்த விசாரணையில் அவர்கள் கடல் பார்க்க சென்றது தெரிய வந்தது.
வாகனத்தை செலுத்திய சிறுவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை.
நான்கு பாடசாலை மாணவர்களும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, லொறியை ஓட்டிச் சென்ற 14 வயதுடைய தியாகராஜா சதுர்ஷன் கம்பளையிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கும், 11 வயதுடைய தங்கராசா குணால், ராஜமாணிக்கம் யுவேந்திரன் மற்றும் 10 வயதான சிவகுரு உஷான் ஆகியோர் ஆகிய மூன்று மாணவர்களையும் நுவரெலியா களுகேலேயில் உள்ள டானியல் இல்லத்திற்கும் மூன்று மாதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




