வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே ‘போரடித்ததால்’ பழைமை வாய்ந்த ஓவியத்தில் காவலாளி கிறுக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஷியாவில் நடைபெற்ற கலை கண்காட்சியில் பாதுகாப்பு காவலாளி ஒருவர் போரடித்தது என்று ஓவியம் ஒன்றின் மீது கிறுக்கியதால் பழைமை மிக்க ஓவியம் சிதைக்கப்பட்டது.
மேற்கு ரஷியாவில் யெகாடெரின்பர்க் நகரத்தில் உள்ள யெல்ட்சின் மையத்தில் இந்த கலை கண்காட்சி நடைபெற்றது. 60 வயதுள்ள அந்த காவலாளி வேலைக்குச் சென்ற முதல் நாளே, டிரெட்டியாகோவ் கலரியில் இருந்து கடனாகப் பெறப்பட்ட கலைஞர் லெபோர்ஸ்காயாவின் ‘மூன்று உருவங்கள்’ (Three Figures) என்ற ஓவியத்தின் மீது பேனாவால் கண்களை வரைந்துள்ளார். ஓவியத்தை காவலாளி சேதப்படுத்தியதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த காவலாளி யெல்ட்சின் மையத்தில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலாளி எனத் தெரியவந்துள்ளது, அந்த காவலாளியின் பெயரை நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த காவலாளி போரடித்ததால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
தற்போது அந்த ஓவியம் மறுசீரமைப்புக்காக மொஸ்கோ கலரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தின் மறுசீரமைப்பு செலவு சுமார் 7 இலட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிக்கான செலவை யெல்ட்சின் மையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி முதலில் டிசம்பர் 20 அன்று காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் உள் விவகார அமைச்சகம் ஆரம்பத்தில் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்க மறுத்துவிட்டது. ஏனெனில் சேதம் “அற்பமானதாக” கருதப்பட்டது.
ஆனால் கலாச்சார அமைச்சகம் பின்னர் இந்த முடிவைப் பற்றி வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகத்தில் புகார் அளித்தது, கடந்த வாரம் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் காவலாளிக்கு அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.



