கண்டாவளை வயலில் தொடங்கிய போட்டோசூட், ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. விவசாயிகள், மீனவர்களின் பெயரால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிடியை தனக்குள் கொண்டு வர அல்லது உடைவை ஏற்படுத்தி எதிர்ப்பவர்களை எல்லாம் வெளியில் விட்டுவிட்டு, அடங்கியிருப்பவர்களையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர அரங்கேற்றிய அரசியல் நாடகத்தின் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
சுமந்திரனின் நகர்வுகள் கூட்டமைப்பை உடைத்து பலவீனமாக்கும் உள்நோக்கமுடையது, அவர் யாருடையதோ “சிலிப்பர் செல்“ ஆக செயற்படுகிறார் என்ற சந்தேகங்களையும், இந்த “போட்டோசூட்“ போராட்டங்கள் ஆழமாக்கியுள்ளன.
சுமந்திரனின் நகர்வுகள் கூட்டமைப்பிற்குள் பிளவை அதிகப்படுத்தியதோ இல்லையோ, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் பிளவை ஆழமாக்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பேசலாம், அவர்களின் குரலுக்கு மாத்திரமே சக்தியுள்ளது என்ற பழையான அணுகுமுறையை கட்சிக்குள் வளர்த்தது தமிழ் அரசு கட்சியே. அதன்விளைவை இன்று தமிழ் அரசு கட்சியினர் அனுபவிக்கிறார்கள்.
இந்த மோசமான அரசியல் கலாச்சாரத்தை வளர்த்து வந்ததால், தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் சீரழிவுகளை யாருமே பேச முடியாமல் இருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய துயரம்- கட்சியின் தலைவரும் பேச முடியாமல் இருக்கிறார். ஏனெனில், அவரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடையவில்லை.
பலமுறை தோல்வியடைந்த தலைவர்களினால் வளர்க்கப்பட்ட தமிழ் அரசு கட்சியில், 2009 இன் பின் எழுந்த இந்த புதிய கலாச்சாரம், விரைவில் கட்சியையே அழித்து விடப் போகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலுக்குத்தான் மதிப்பு என்பது எவ்வளவு பெரிய அபத்தமென்பதை மட்டக்களப்பு நிலவரத்தை வைத்தே மதிப்பிடலாம். பல சிங்கள கட்சிகளில் 30 வயதில் அரசியல் முதிர்ச்சியுடன் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால். சாணக்கியன் பொது இடங்களில் கருத்து சொல்லும் போது, எவ்வளவு விடலைத்தனமாக பேசுகிறார், சிந்திக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தமிழ் அரசு கட்சியின் அரசியல் கலாச்சாரத்தின்படி தேர்தலில் வெற்றியடையாத கிழக்கின் மூத்த அரசியல்வாதிகளின் குரல் கணக்கெடுக்கப்படாமல், தேர்தலில் வெற்றியடைந்த சாணக்கியன் போன்ற முதிர்ச்சியற்றவர்களின் குரல்கள் மட்டுமே எடுபடுமெனில்,அந்த கட்சியின் நிலைமை எங்கு போய் முடியும்?
அந்த அவலம் மட்டக்களப்பில் விரைவில் நடக்கும்.
வடக்கில் நடந்து முடிந்த போட்டோசூட் போராட்டங்கள் எம்.ஏ.சுமந்திரனின் அழைப்பினால் நடத்தப்பட்டது. கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிற்குமே, இறுதிக்கட்டத்தில்தான் தெரிய வந்தது. அதை தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.
போட்டோசூட் போராட்டங்களிற்கு சுமந்திரன் அழைப்பு விடுத்த முறைகளை அவதானித்தாலே, அதன் பின்னணியில் மறைந்துள்ள நோக்கங்கள் பொறிதட்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவோ, தமிழ் அரசு கட்சியின் ஊடாகவோ அந்த போராட்ட அறிவிப்பை சுமந்திரன் விடுக்காதது, அந்த கட்டமைப்பிற்குள் அவர் தொடர்ந்து செயற்பட தயாரில்லையென்பதையும் புலப்படுத்துகிறது. அப்படியொரு நோக்கமில்லாத பட்சத்தில், அந்த கட்டமைப்பை மீறி அவர் செயற்பட்டிருக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்காது.
போட்டோசூட் போராட்டம் பற்றி சுமந்திரன் அணி அறிவிக்கும் வரை, தமிழ் அரசு கட்சியின் தலைவர், ஏனைய சிரேஷ்ட தலைவர்கள், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியாது.
தமிழ் அரசு கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களில், சுமந்திரனின் கட்டளைப்படி செயற்படுபவர்கள் சாணக்கியன், கலையரசன் ஆகியோர். சிறிதரனிற்கு தோற்ற மயக்கம். அவருக்கு சுமந்திரனை பார்க்கும் போது, ஒரு சமயத்தில் அன்ரன் பாலசிங்கமாகவும், இன்னொரு சமயத்தில் சிக்கலானவராகவும் தெரிவார். அதனால் அவரால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது. எஞ்சியவர் சாள்ஸ் நிர்மலநாதன்.
இந்த பட்டியலில் சாள்ஸ் நிர்மலநாதனை கடைசிப் பெயராக குறிப்பிட்டிருந்தாலும், இந்த செய்தியின் தலைப்பிற்குரியவர் அவர்தான்.
தமிழ் அரசு கட்சிக்குள் அண்மைக்காலமாக நடக்கும் கூத்துக்களை துணிந்து சுட்டிக்காட்டி, எதிர்த்த எம்.பி அவர் ஒருவர்தான்.
சுமந்திரனின் போராட்ட அறிவித்தல் கட்சித் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள் பெரும்பாலானவர்களிற்கு தெரியாது என்ற சர்ச்சை உருவான பின்னர், சுமந்திரன் இணையவழி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொன்.செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம், ப.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட யாராலும், சுமந்திரனின் போராட்ட அறிவிப்பு வழிமுறை பிழையானது என்பதை சுட்டிக்காட்ட தயாராக இருக்கவில்லை. அதற்கான துணிவும் இருக்கவில்லை. ஆனால், அந்த வருத்தம் அவர்களின் அடி மனதில் ஆழமாக இருந்தது.
இப்படி யாருமே தமிழ் அரசு கட்சிக்குள் சுமந்திரனை எதிர்க்க துணியாத நிலையில்- சுமந்திரன் செய்தது பிழையான அணுகுமுறையென்பதை சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பை துணிவாக பதிவு செய்துள்ளார்.
படகுச்சவாரிக்கு முதல்நாள் மாலையில்தான் சி.சிறிதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமந்திரன் அழைப்பு விடுத்தார்.
முதல்நாள் மாலையில்தான் சிறிதரன் தனது பேஸ்புக்கில் போராட்ட அழைப்பை விடுத்தார்.
அதன் பின்னர், சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கு அழைப்பை ஏற்படுத்தினார். பலமுறை அழைப்பை ஏற்படுத்தியும், சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. பின்னர், பிறிதொரு முக்கிய பிரமுகர் ஊடாக சாள்ஸ் நிர்மலநாதனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சாள்ஸ் நிர்மலநாதன் மீனவர் விவகாரத்தில் தொடர்ந்து- அதிகமாக பேசி வருபவர். அவரது பகுதியில், அவர் அக்கறை காட்டும் விவகாரத்தில்- அவருக்கு தெரியாமல் போராட்ட ஏற்பாடு செய்து, போராட்டத்திற்கு முதல்நாளில் விருந்தினர் போல அழைக்கப்படுவதை ஏற்க முடியாதல்லவா?
அழைப்பேற்படுத்திய பிரமுகருக்கு இதை காரசாரமான தொனியில் சாள்ஸ் எம்.பி புரிய வைத்துள்ளார்.
தமிழ் அரசு கட்சியில் தனியொருவன் என சாள்ஸ் எம்.பியை சொல்லலாம் அல்லவா!




