சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொழும்பு, கண்டி, நுவரெலியா, காலி, இரத்னபுரி மற்றும் கிளிநொச்சி ஆகிய ஆறு மாவட்டங்கள் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1,403 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5,777 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான சம்பவங்கள் காரணமாக 142 வீடுகளும் சேதமடைந்துள்ளன. களனி, களு, ஜின் மற்றும் நில்வள கங்கைககளில் சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
எட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளும் நாளை அதிகாலை 1.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேற்கு, மத்திய, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவில் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வட-மத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டம் சில நேரங்களில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



