தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் அவர்களது தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நஷீட் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் அவர்களது தந்தை திரு.அப்துல் சதார் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர், நஷீட் அவர்களது நலன் குறித்து விசாரித்ததுடன் அவர் குணமடைவதற்காக ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார்.
கடந்த ஆறாம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் அவர்கள் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார்.
குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர் அவர்கள், ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் மாலைத்தீவின் ஜனாதிபதியாக (2008-2012) சேவையாற்றியவர் மொஹமட் நஷீட் அவர்களாவார். அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவராவார்.
பிரதமர் ஊடக பிரிவு