கஞ்சாவை மருத்துவ பாவனைக்காக விற்பனை செய்ய சட்டபூர்வ அனுமதியளிக்க வேண்டும். இது பெரியளவில் பொருளாதார நன்மையை தரக்கூயது. இதன்மூலம் தற்போதைய கடன்களை அடைக்கலாமென யோசனை தெரிவித்துள்ளார் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகளும், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடு வெளிநாட்டு கடன்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், வெளிநாட்டு முதலீடுகளை உருவாக்க வேண்டும் என்றால் தற்போது நாட்டில் மதுபான சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை போல் கஞ்சாவிற்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.
அரச அனுசரணையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதன் மூலமாக கடன்களில் இருந்து விரைவாக மீள முடியும். கஞ்சா வெளிநாடுகளில் முக்கிய பாவனையில் உள்ளது. ஆயுர்வேத பாவனைக்கும் இது அவசியமானது.
எனவே புதிதாக நாம் சிந்திக்க வேண்டும். அபிவிருத்தி அடைந்த உலகில் அதற்கு ஏற்ப சிந்தித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கஞ்சாவை போதைப்பொருள் பட்டியலில் சேர்க்காது அரச அனுசரணையில் இதனை சட்டமாக்கி ஏற்றுமதி செய்ய வேண்டும். பிரதான ஏற்றுமதியாக இதனை கருதி அதன் மூலமாக நாட்டின் கடன்களை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல பகல் பொருளாதாரம் மாதிரியே இரவு பொருளாதார கொள்கையொன்றை உருவாக்க வேண்டும். எமது நாட்டில் இன்றும் அவ்வாறான திட்டமொன்று இல்லை.
எமது மக்கள் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை விடுமுறைக் காலத்தில் செலவுசெய்ய இடமொன்று இல்லை. இதனாலேயே சிங்கப்பூர், மலேசியா, பாங்கொங்கிற்கு செல்கிறார்கள்.
எனவே எமது நாட்டிற்கு இரவு பொருளாதார திட்டமொன்று அத்தியாவசியமாகியுள்ளது. சுற்றுலாத்தறையில் முன்னணியில் உள்ள நாடாக நாம் இருக்கின்ற போதிலும் இரவு 11 மணிக்கு பின்னர் மதுபானசாலை திறக்கப்படுவதில்லை. ஆனால் இந்த நிலைமை மாற வேண்டும்.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் செலவு செய்யவோ, மதுபானங்களை பெற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. சுற்றுலாத்துறையினருக்கும் தமது பணத்தை செலவு செய்ய இடமில்லை.
எனவே நள்ளிரவு ஒரு மணி வரையிலேனும் மதுபான சாலைகளை திறந்து வைக்க வேண்டும். எமது மக்களுக்கும் இது பயனளிக்கும். எனவே மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்து நான் கூறும் விடயங்களை உள்வாங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன், இந்த திட்டம் உங்களுடையதா அல்லது அரசாங்கத்தினதா என கேள்வியெழுப்பினார். இது தனது திட்டமென்றார் டயானா.



