சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக, பிபிசி-யிடம் பேசிய பல பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட பணியாளர்களில் ஒருவர் இலங்கையர் என கூறப்படுகிறது.
ஹானர் 25 என்ற அந்தக் கப்பல், புதன்கிழமை இரவு, கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ஆறு துப்பாக்கிதாரிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடத்தல்களுக்குப் பெயர்போன இந்தியப் பெருங்கடலின் இந்தப் பகுதியில் கடற்கொள்ளை கிட்டத்தட்ட மறைந்திருந்தது. ஆனால், அதன் பிறகு மீன்பிடி இழுவைப் படகுகள் அல்லது கொள்கலன் கப்பல்களைக் குறிவைத்து அது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சோமாலியத் தலைநகரான மொகடிஷுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டிருப்பது, அந்நகரில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும். அங்கு, ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் விலை ஏற்கனவே மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
அது 18,500 பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் சென்றதாக, சோமாலியாவின் பகுதி தன்னாட்சி பெற்ற புன்ட்லாந்து பிராந்தியத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பிபிசி-யிடம் தெரிவித்தனர்.
ஷிப்அட்லஸ் வலைத்தளத்தின்படி, கடத்தப்பட்ட கப்பல், சுயமாக அறிவிக்கப்பட்ட சோமாலிலாந்து குடியரசில் உள்ள பெர்பெரா துறைமுகத்திலிருந்து பெப்ரவரி 20 அன்று புறப்பட்டு, மோதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அருகில் வந்தடைந்தது.
பின்னர், கப்பல் வரைபடம், அது ஹோர்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் வட்டமிடுவதையும், ஏப்ரல் 2 அன்று திரும்பி மொகடிஷுவை நோக்கிச் செல்வதையும் காட்டுகிறது.
கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கப்பலில், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர், ஒரு இலங்கையர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் என 17 பணியாளர்கள் உள்ளனர். அது, ஸாஃபூன் மற்றும் பந்தர் பெய்லா ஆகிய மீன்பிடி நகரங்களுக்கு இடையே சோமாலியக் கடற்கரைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளது.
அதன்பிறகு, மேலும் ஐந்து ஆயுதமேந்திய நபர்கள் ‘ஹானர் 25’ கப்பலில் ஏறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தல்காரர்கள் பந்தர் பெய்லாவுக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூரப் பகுதியிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். அவர்களால் எப்படி அந்த எண்ணெய் கப்பலை வழிமறித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சோமாலிய அதிகாரிகளோ அல்லது சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் ஐரோப்பிய கடற்படையோ, இந்தக் கடத்தல் குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.



