பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னம்பிட்டி, புலிப்பாலத்திற்கு அருகில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
அரலகங்வில, அருணபுர பகுதியைச் சேர்ந்த யு. டபிள்யூ.டபிள்யூ. ஜி. ரன்பண்டா, அவரது மனைவி 62 வயதான பி. கே. நந்தாவதி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த அவர்களது உறவினரான 72 வயதுடைய டி. ஜி. விமலா ரந்தெனிய ஆகியோரே உயிரிழந்தனர்.
அரலகங்வில அருணபுர பகுதியில் இருந்து மாத்தளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகினர். பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்களுடன் தனியார் பஸ் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
முச்சக்கரவண்டி மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்லும் போது தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





