இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடைசெய்ய வலியுறுத்தி வடமராட்சி மீனவர்கள் இன்று 3வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுப்பர்மடத்தில் போராட்டம் தொடரும் நிலையில், இன்று காலையில் இருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் மீனவர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மீனவர்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் போராட்டத்தையடுத்த யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கடற்படை அதிகாரிகள், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்று மீனவர்களுடன் பேச்சு நடத்தினர்.
எனினும், இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையெடுத்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவதாக மீனவர்கள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் சமரச முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
பிரதேச செயலகத்தின் வாயிலை மீனவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பிரதேச செயலகத்திற்குள் யாரும் நுழைய முடியவில்லை.
அத்தோடு யாழ்ப்பாணம் – பருத்தாத்துறை பிரதான வீதியையும் மறித்து வீதியில் இந்திய மீனவர்களால் அறுத்து நாசமாக்ப்பட்ட வலைகளையும் போட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததோடு பாடசாலை மாணவர்கள் மாத்திரம் வீதியினால் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.





