ரி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.
ரி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை-நமீபியா அணிகள் மோதின.
அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் ரொஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, நமீபியா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீபன் பார்ட் மற்றும் ஜேன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டீபன் பார்ட் 7 ரன்னிலும், கிரீன் 8 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வில்லியம்ஸ் மற்றும் ரஸ்மூஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸ்மூஸ் 20 ரன்னிலும், வில்லியம்ஸ் 29 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்தை வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நமீபியா 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியின் தீக்ஷன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கி 13.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 100 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம், ரி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
தீக்ஷன ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



