தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக குறிப்பிட்டு கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாண கிளையும், வங்கியியலாளர் சங்கத்தினரும் வழங்கியுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியை தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமக்கு வழங்கப்படும் உணவில் திருப்தியின்மை நிலவுவதாகவும், மாற்றுடைகள் வழங்கப்படவில்லையென்றும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்தநிலையில், இன்று தமிழ்பக்கத்துடன் பேசிய ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், தமக்குரிய அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினரும், வங்கியிலாளர் சங்கத்தினரும் நேற்று வழங்கியதாக தெரிவித்தார்.
முல்லைத்தீவில் தாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாமில் அந்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு, தமக்கு கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தம்மை சந்திக்க வந்தபோதும், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
நேற்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இருந்து தம்மை பார்வையிட வந்திருந்த போதும், தம்மை பார்வையிட அவர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லையென குற்றம்சாட்டினார்.
இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்று முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு சென்றதை உறுதி செய்தார்.
கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தரப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் முல்லைத்தீவு விமானப்படையினரின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்றதாகவும், பாதுகாப்பு அங்கி போன்றவற்றை கொண்டு சென்றிருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
நேற்று அங்கு சென்று சம்பவம் தொடர்பில் கொழும்பு தலைமையகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.



