மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில், குடும்பத் தகராறினால் ஏற்பட்ட கை கலப்பு சண்டையின் போது, 63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரை அவரது சகோதரனே கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொன்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (4) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றதாகவும், உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாடு கை கலப்பு சண்டையாக மாறியதையடுத்து, அதை சமாதானப்படுத்த முற்பட்டவேளையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று நிலைமையை கண்காணித்துள்ளார்.
சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




