அண்மையில் பல்டியடித்த அங்கஜன் இராமநாதன் தரப்பினர், உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்கயன் தரப்பினரால், அவரது சித்தப்பாவின் வர்த்தக வலையமைப்பு பிரமுகர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அண்மையில் பல்டியடித்து, பெரமுனவி எம்.பிக்களால் பெருமளவில் ஆதரிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு ஆதரவளித்தார்.
மதுபானச்சாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டே அவர் பல்டியடித்ததக விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது தந்தையின் பெயரில் மதுபானச்சாலை பெறும் முயற்சிக்கான ஆவணங்களும் அம்பலமாகியிருந்தன.
கடந்த நாடளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பளிப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து பெருமளவான இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்த அங்கஜன், தனது வாக்குறுதிகளில் ஒன்றையேனும் நிறைவேற்றவில்லை. அவர் ஆதரித்த கோட்டபயவையும் மக்கள் விரட்டியடித்தனர். இது குறித்து எந்த பொறுப்புக்கூறலுமின்றி, மீண்டும் அடுத்த தேர்தலுக்கு அவர் கடையை விரிக்க ஆரம்பித்துள்ளார்.
கடந்த தேர்தலில் அவர் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றையேனும் நிறைவேற்றாததால் அவரை ஆதரித்த பெரும்பாலான இளைஞர்கள் விலகிச் சென்றுவிட்ட நிலையில், தனவசமுள்ள சில ஆதரவாளர்களுடன் ரணில் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது, வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் பிரச்சாரக்கூட்டம் நடந்தது. அங்கஜன் இராமநாதன் குழுவால் இந்த பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக கூட்டம் நடந்த அன்றைய திகதியில் நெல்லியடி பொலிசாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் இதே மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்காக அங்கயனின் தந்தையன இராமநாதனின் சகோதரன் செயற்படுவதாக கூறப்படுகிறது. இரு குடும்பத்துக்குமிடையில் தகராறு ஏற்பட்டு, பிளவடைந்ததாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சஜித்தின் கூட்டத்தை குழப்புவதற்காக அங்கஜன் தரப்பினர் சூழ்ச்சித்திட்டமொன்றை தீட்டியதாகவும், ஒரு வாரத்துக்கு மைதானத்தை தமது தேவைக்காக பெற்றுள்ளதாகவும், மக்களை அழைத்து வந்து பொக்கற் மீற்றிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது சஜித்தின் கூட்டத்தை குழப்ப தீட்டப்பட்ட திடீர் திட்டமென கருதப்படுகிறது.
சஜித்தின் கூட்டத்துக்காக மைதானத்தை பெற, அங்கஜனின் சித்தப்பா தரப்பினர் முயன்ற போது, இரு தரப்புக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவரது வர்த்தக வலையமைப்பின் பிரமுகர் ஒருவர் கொலையச்சுறுத்தல் விடுத்ததாக குறிப்பிட்டு, அங்கயன் தரப்பினர் நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.




