‘தமிழ் அரசு கட்சியை பணிய வைப்போம்…’- குடிமைச்சமூகம் வீறாப்பு; ‘அரசியல் முள்ளிவாய்க்காலை உருவாக்காதீர்கள்’-கட்சிகள் அறிவுரை!

Date:

குடிமைச்சமூகம் என்ற பெயரில் இயங்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதிலுள்ள அபாயங்களையும், அரசியல் விவகாரங்களில் பொறுப்புடன் நடக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டி அனுப்பிவைத்துள்ளது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு.

நேற்று (20) யாழ்ப்பாணம், உரும்பிராயில், சிவில் சமூகம் என குறிப்பிட்ட நபர்களுடன் நடந்த சந்திப்பில், “தமிழ் மக்களை மீண்டுமொருமுறை ‘அரசியல் முள்ளிவாய்க்காலில்’ விட்டுவிடக்கூடாது“ என இந்த நபர்களுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவுரை கூறியது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்டுரையாளர்கள், சில மத தலைவர்கள் இணைந்து சிவில் சமூகமென்ற பெயரில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் யோசனையை முன்வைத்தனர். இந்த அணிக்குள், தென்னிலங்கை கட்சிகளின் பின்னணியில் செயற்படுபவர்கள், தூதரக நிதியில் செயற்படுபவர்களும் இணைந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதும் சிலர், அரசியல் கட்சிகளை தாம் வழிநடத்துபவர்களாக- பிரமுகர்களாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும்- தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை ஆரம்பித்திருந்தனர்.

இப்படியாக- தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தவிர்ந்த- வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் விபரீதத்தில் முடியும் என பல தரப்பினரும் எச்சரித்து வந்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியும் உடனடியாக பொதுவேட்பாளர் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பதில்லையென முடிவு செய்துள்ளது.

இந்த பின்னணியில், யாழ்ப்பாணம், உரும்பிராயில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை- பொதுவேட்பாளரை வலியுறுத்தும் நபர்கள் சந்தித்து பேசினர்.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், என்.சிறிகாந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வேந்தன் உள்ளிட்டவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுவேட்பாளர் விவகாரத்தில் இதுதான் கடைசிக்கூட்டம், உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென குடிமைச்சமூகத்தினர் வலியுறுத்தினர்.

முன்னதாக, குடிமைச்சமூகத்தினர் தமக்கிடையில் நடத்திய கலந்துரையாடலில் எந்த அரசியல் கட்சிகளும் பொதுவேட்பாளருக்கு உடன்படாவிட்டாலும், தாம் பொதுவேட்பாளர் ஒருவரை நியமித்தே தீருவது என முடிவெடுத்திருந்தனர். அதை சூசகமாக கூட்டத்தில் தெரிவித்தனர்.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியும் பின்வாங்கியுள்ளதால், சற்று நிதானமாகவே தாமும் முடிவெடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சி பொதுவேட்பாளரை ஆதரிக்காவிட்டாலும் எந்த பிரச்சினையும் இல்லை, தாம் பொதுவேட்பாளரை நியமிப்போம், பெரும் மக்கள் அலையை உருவாக்கி, தமிழ் அரசு கட்சியை எம்மை நோக்க வரவைப்போம் என குடிமைச்சமூகத்தினர் சவடால் விட்டனர்.

தமிழ் மக்கள், பொதுவேட்பாளரை ஆதரிக்காமல் விட்டால் ஏற்படும் அரசியல் அபாயங்களை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய போது, “மக்களை அந்த நேரம் உசுப்பேற்றி வாக்களிக்க வைக்கலாம்“ என இந்த குழுவினர் பதிலளித்தனர்.

இதனை கண்டித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடைய அரசியல் நகர்வுகளில் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை புரிய வைத்ததுடன், மக்களும், போராளிகளும் இதுவரை செய்த அர்ப்பணிப்புக்களை நீர்த்துப் போகும் விதமாக செயற்படக்கூடாதென அறிவுரையும் கூறினர்.

இதன்போது, “தமிழ் மக்களை மீண்டுமொருமுறை ‘அரசியல் முள்ளிவாய்க்காலில்’ விட்டுவிடக்கூடாது“ என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, மேற்படி குடிமைச்சமூகத்துக்கு தெரிவித்தது.

தமிழ் பொதுவேட்பாளருக்கு தயாராக இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ரெலோ, புளொட், ஜனநாயக போராளிகள் ஆகிய மூன்று கட்சிகளும் உடனடியாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. கட்சிக்குள் கலந்துரையாடல்கள் நடத்தி, கட்சி சம்மதித்தால்- அனைத்து தமிழ் கட்சிகளும் பொதுவேட்பாளரை ஆதரித்தால்- தாமும் ஆதரிக்க தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய அனைத்து கட்சிகளும் சம்மதித்தால், பொதுவேட்பாளரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்