குரங்கு இனப்பெருக்கம் செய்யும் சீன நிறுவனமொன்று குரங்குகளை கேட்க, அரசாங்கம் ஒரு இலட்சம் குரங்குகளை விற்றால் எவ்வளவு தேறும் என பெருக்கிப் பார்த்து விட்டு, ஆர்வக்கோளாறினால் ஒரு செய்தி அடித்து விட, குரங்குப் பிரச்சினைதான் ஒரு வாரமாக இலங்கையில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதுவும் சீனாவுடன் தொடர்புடைய ஒரு குரங்குப் பிரச்சினைதான். ஆனால் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் விவகாரமல்ல.
வீட்டிலிருந்த கையடக்க தொலைபேசியை திருடிக் கொண்டு மரக்கிளையில் ஏறிய குரங்கிடமிருந்து, ஒருவர் சமயோசிதமாக கையடக்க தொலைபேசியை மீட்டெடுத்த சம்பவமொன்று பலாங்கொடை, பின்னவல பகுதியில் பதிவாகியுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் கையடக்க தொலைபேசி நீரில் விழுந்து விட்டது. அதை வீட்டின் முன்புறம் வெளியில் உலர விட்டுள்ளார்.
குரங்கொன்று வந்து கையடக்க தொலைபேசியை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறிவிட்டது. குரங்கிடமிருந்து கையடக்க தொலைபேசியை மீட்க, அந்த நபர் எவ்வளவோ வித்தைகள் எல்லாம் செய்து பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.
இறுதியாக, குரங்கின் கையிலிருந் கையடக்க தொலைபேசிக்கு, மற்றொரு கையடக்க தொலைபேசியிலிருந்து அழைப்பேற்படுத்தியுள்ளார். தொலைபேசி ஒலித்ததும், குரங்கு பயத்தில் கைய்க்க தொலைபேசியை தவற விட்டது. அவர் அதை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு விட்டார்.
இதில் சுவாரஸ்ய விடயம் என்னவென்றால், குரங்கு எடுத்துச் சென்ற கையடக்க தொலைபேசி சீன நிறுவனமொன்றின் தயாரிப்பாகும்.



