2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே தீவிரமாகச் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அது தொடர்பான வன்முறை தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து சாலேவுக்கு முன்னரே தெரிந்திருந்தது என்று கூறினார்.
“தாக்குதல்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, நீர்கொழும்பில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருப்பலியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியத் தகவல்களைச் சேகரிப்பதற்காக, சாலே நான்கு முஸ்லிம் நபர்களைப் பயன்படுத்தியிருந்தார். அந்த நால்வரில் முதன்மையானவர், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சாட்சிகளால் ஒரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகும் அவர் காணாமல் போனதாகவே அறிவிக்கப்பட்டுள்ளார். தாக்குதல்கள் குறித்து இராணுவப் புலனாய்வு சேவைக்குத் தகவல் அளித்த அந்த நபரை, கொழும்பில் உள்ள ஒரு விடுதியில் சாலே சந்தித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
தாக்குதல்களைச் சுற்றியுள்ள அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளிப்படுத்தக்கூடிய முக்கியத் தகவல்கள் கசியவிடப்படுவதைத் தடுக்க சாலே நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் அமைச்சர் விஜேபால மேலும் கூறினார்.
மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறும் சமீபத்திய அறிக்கைகள் பொய்யானவை என்றும், ஒரு முக்கிய சந்தேக நபருக்கு வழங்கப்படும் அனைத்துத் தேவையான ஏற்பாடுகளும், அவரது சட்டத்தரணிகளுடனான ஆலோசனைகள் உட்பட, சாலேவுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“சாலேயின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ள நீதிபதி அவரைச் சந்தித்தபோது, மனிதாபிமானமற்ற நடத்தை குறித்து நீதிபதியிடம் எந்தப் புகாரும் தெரிவிக்கப்படவில்லை. மனிதாபிமானமற்ற நடத்தை தொடர்பாக சாலே மற்ற அதிகாரிகளிடமும் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், சாலே தனது மடிக்கணினி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை புலனாய்வாளர்களுக்கு வழங்க இதுவரை மறுத்து, விசாரணைகளுக்குத் தடையாகச் செயல்பட்டு வருவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு போராட்டங்களாலோ அல்லது சத்தியாகிரகங்களாலோ நிறுத்தப்படாது என்று அமைச்சர் விஜேபால மேலும் கூறினார்.
சுரேஷ் சாலே மீதான விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பல அரசியல் பிரமுகர்கள் சிக்கக்கூடும் என்ற அச்சத்தின் பின்னணியில் அண்மைய நாட்களில், சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.




