ஒக்கவெலவைச் சேர்ந்த 55 வயதான சொகுசுப் பேருந்து சாரதி ஒருவரின் வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் பொட்டலம் வெடித்ததில், விஷம் கலந்ததால் அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர், தெற்கு அதிவேக வீதியின் தங்காலை – மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்து ஒன்றின் சாரதியாவார்.
கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே இந்தச் சாரதி திடீரென கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்டு அவர் சிகிச்சைக்காக தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (9) தங்காலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வயிற்றிலிருந்த அந்த இரண்டு போதைப்பொருள் பொட்டலங்களில் ஒன்று உடைந்ததால், அந்தப் போதைப்பொருள் உடலின் உட்பகுதியில் இரத்தத்துடன் கலந்து ஏற்பட்ட விஷமே இந்த மரணத்திற்குக் காரணம் என மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.




