யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு ஆளுனரின் அரசியல் தலையீடு உள்ளதென தெரிவித்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படவில்லை. ஒரு பகுதி சட்டத்தரணிகளால் மாத்திரம் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய ஒரு பகுதி சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த குழப்பத்தினால் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பரமராஜா, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைமை பொறுப்பிலிருந்து விலகினார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா, அந்த கடமையிலிருந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையேற்ற ஒரு மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
வடக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலருக்கு எதிராக வடக்கு ஆளுனர் அமைத்த விசாரணைக்குழுவுக்கு எதிராக, யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இது தொடர்பில் வடக்கு ஆளுனர் அரச உயர்மட்டத்தில் முறையிட்டு, அரசியல் தலையீட்டை கோரியதாக தற்போது குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்குள், இந்த வழக்கு மீள விசாரணைக்கு வந்த போது, உள்ளூராட்சி பிரதிநிதிகள் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்த முயன்றதாக தெரிவித்ததுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. வடக்கு ஆளுனரின் மூலமான அரசியல் தலையீட்டினால், இது நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
நீதிச்சேவை விவகாரங்களில் அரசியல் தலையீட்டுக்கு எதிராக என்ன நடவடிக்கையெடுப்பது என்பது தொடர்பில் ஆராய கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் கூட்டம் நடந்தது. இதில் போதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வது என்ற திட்டத்தையே ஆரம்பத்தின் முன்வைத்தனர். எனினும், கோரம் இல்லாத காரணத்தினால் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
தவிரவும், யாழ் மேல் நீதிமன்றம் வடமாகாணத்திற்கான நீதிமன்றம் என்ற அடிப்படையில் போராட்டம் பற்றி ஆராய ஏனைய சட்டத்தரணிகள் சங்கங்களிற்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்குள் உள்ள ஏனைய சட்டத்தரணிகள் சங்கங்களான மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்றவற்றிற்கும் தகவல் அனுப்ப்பபடவில்லை.
இதை தொடர்ந்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.எனினும், இதற்கு ஒரு பகுதி சட்டத்தரணிகள் உடன்படவில்லை. நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் தலையிட முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், ஒரு பகுதி சட்டத்தரணிகள் இந்த கடிதத்தை தயார் செய்து, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பரமராஜாவின் கையொப்பத்திற்காக அனுப்பினார்கள். எனினும், அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் தலையிட முடியாது என தெரிவித்து, கையெழுத்திட மறுத்து விட்டார். அத்துடன், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைமை பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார்.




